Friday, February 8, 2019

கணவனைப் பற்றிய பதினோரு பெண்களின் இலக்கியச் சுவை நிறைந்த வர்ணனை!


[முன்குறிப்பு: இது கதையோ கற்பனையோ அல்ல. அண்ணல்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணைவியார் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களால் அறிவிக்கப்பட்டு புகாரி, முஸ்லிம், நஸாஈ, திர்மிதீ ஆகிய நபிமொழி திரட்டில் பதிவு செய்யப்பட்ட உண்மையான சம்பவம்.]

பொதுவாக மனைவிமார்கள் தங்கள் கணவரைப்பற்றி அடுத்தவர்களிடம் நிறை, குறைகளைச் சொல்லி ஆறுதல் படுத்
திக்கொள்வது எல்லா நாடுகளிலுமுள்ள வழக்கம்தான். மனைவியிடம் நல்லவன் என்று நற்சான்றிதழ் கிடைப்பது லேசுபட்ட காரியமல்ல! ஆனால் தான் திருமணம் முடித்துக்கொண்ட அத்தனை மனைவிமார்களிடமும் மிகவும் சிறந்தவர் எனும் நற்சான்றிதழ் பெற்றவர்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களாகத்தான் இருக்க முடியும்.

ஒரு ருசிகரமான சம்பவத்தை இங்கு வாசகர்களுக்காக தருகிறோம். காரணம், இந்த சம்பவத்தில் சில கணவர்களின் சிறந்த அடையாளங்கள் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்தை கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ரசித்துக்கேட்டு தன்னையும் ஒப்பிட்டுள்ளார்கள்.

ஆம், இதில் வரும் ஒரு கணவரை தனக்கு ஒப்பிட்டு அவரைப்போல் நானும் உனக்கு சிறந்த கணவன் என்று தனது அன்பு மனைவி ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் பெருமையாக எடுத்துக்கூறியும் உள்ளார்கள். அதை அண்ணாரின் இல்லறத் துணைவியான ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களும் அப்படியே ஏற்று ஆமோதித்துள்ளார்கள்.

இதோ அந்த ருசிகர சம்பவம்... படித்து பரவசம் அடைவதோடு விட்டுவிடாமல் நீங்களும் சிறந்த கணவர் ஆக முயற்சி செய்யலாம் தானே!

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திற்கு முன் வாழ்ந்த எமன் நாட்டைச்சேர்ந்த பதினோரு (11) பெண்கள் தங்களின் கணவன்மார்கள் வெளியூர் சென்றிருக்கும்போது பொழுதுபோக்கிற்காக ஓரிடத்தில் ஒன்று கூடினார்கள். ஒவ்வொருவரும் தத்தமது கணவர் குறித்த செய்திகளில் எதையும் மூடிமறிக்காமல் உள்ளதை உள்ளபடி எடுத்துச் சொல்ல வேண்டும் என உறுதிமொழியும், தீர்மானமும், வாக்குறுதியும் எடுத்துக்கொண்டு பேசத்துவங்கினார்கள்.

★ முதலாவது பெண் கூறினாள் : 
என் கணவர் (உயரமான) மலை உச்சியில் வைக்கப்பட்டுள்ள மிகவும் இளைத்துப் போன ஒட்டகத்தின் இறைச்சிக்கு ஒப்பானவர். (இளைத்த ஒட்டகத்தின் இறைச்சியாக இருந்தாலும், அதை எடுக்க) மேலே செல்லலாம் என்றால் (அந்த மலைப்பாதை) சுலபமானதாக இல்லை. (சிரமத்தைத் தாங்கி) மேலே ஏற (அதுவொன்றும்) கொழுத்த (ஒட்டகத்தின்) இறைச்சியுமில்லை.

விளக்கம் :
அவளின் கணவன் ஓர் உபயோகமற்றவன். அவனைக்கொண்டு எவருக்கும் எத்தகைய நன்மையும் கிடையாது. அவன் மலையின் உச்சிபோல அகம்பாவியாகவும், அதன் கரடுமுரடான பாதையைப்போல் கெட்ட குணம் கொண்டவனாவான். ஆகையால் அவனிடம் உறவு கொள்வது எளிதல்ல. அவனுடன் சேர்ந்து இன்பமாக வாழ முடியாது. அவனைவிட்டு பிரிந்திருக்கவும் முடியாது.

★ இரண்டாவது பெண் கூறினாள் : 
நான் என் கணவர் பற்றிய செய்தியை அம்பலப்படுத்தப் போவதில்லை. (அப்படி அம்பலப்படுத்த முயன்றாலும்) அவரைப்பற்றிய செய்திகளை ஒன்றுவிடாமல் சொல்லமுடியுமா என்ற பயமும் எனக்கு இருக்கிறது. அவ்வாறு கூறுவதானாலும் அவரது வெளிப்படையான மற்றும் குற்றங்குறைகளைத் தான் கூறவேண்டியதிருக்கும்.

விளக்கம் :
அவனிடம் ஒருசில குற்றங்கள் இருந்தால் அதை இங்கு எடுத்துச் சொல்லி விடலாம். ஆனால், அவனிடம் உச்சி முதல் உள்ளங்கால் வரை குற்றங்களும், குறைகளும் நிரம்பியிருக்கின்றன. அவ்வாறு இருக்கையில் அவனுடைய குறைகளில் எதைச்சொல்வது எதை விடுவது? எல்லாமே குற்றம்தான்.

★ மூன்றாவது பெண் கூறினாள் : 
என் கணவர் மிகவும் உயரமான மனிதர். அவரைப் பற்றி நான் (ஏதேனும்) பேசி (அது அவரது காதுக்கு எட்டி)னால் நான் விவாகரத்து செய்யப்பட்டு விடுவேன். (அதே நேரத்தில் எதுவும் பேசாமல்) நான் மவுனமாக இருந்தால் அந்தரத்தில் விடப்படுவேன்.

விளக்கம் :
அவன் அதிக உயரமாக வளர்ந்திருந்ததால் அறிவு குறைவாக இருந்திருக்கிறது. ஆகையால் அவனிடம் ஏதாவது பேச ஆரம்பித்தால் தவறாக நினைத்து மனைவியை விவாகரத்து செய்து விடுவான். பேசாமல் இருந்து விட்டால் அவன், அவளின் தேவைகளைப்பற்றி எதுவும் கண்டு கொள்ளாமல் இருந்து விடுவான். அப்பொழுது அவள் இரண்டுங்கெட்டான் நிலையில் திண்டாடிக் கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டு விடும். மனைவியுடன் நல்லபடியாக வாழவும் மாட்டான். விவாகரத்தும் செய்ய மாட்டான்.

★ நான்காவது பெண் கூறினாள் : 

என் கணவர் (மக்கா உள்ளிட்ட) "திஹாமா" பகுதியின் இரவு நேரத்தைப் போன்ற(இதமான)வர். (அவரிடம்) கடும் வெப்பமும் இல்லை, கடுங்குளிரும் இல்லை. (அவரைப் பற்றி) எனக்கு அச்சமும் இல்லை. (என்னைப் பற்றி அவரும்) துச்சமாகக் கருதியதும் இல்லை.

விளக்கம் :
மக்காவுக்கும் அதன் சுற்றுப் புறங்களுக்கும் "திஹாமா" என்றொரு பெயரும் உண்டு. அப்பிரதேசதேசத்தில் பலற் காலத்தில் கடுமையான வெயில் அடித்தாலும், இரவு நேரங்களில் அங்கு சீதோஷ்ன நிலை நடுத்தரமாகவே இருக்கும். இந்த நான்காவது பெண்ணின் கணவர் எப்போதும் நடுத்தரமாகவே எல்லா காரியங்களிலும் இருப்பார். எனவே அவரிடம் குடும்பம் நடத்துவதில் அவளுக்கு பயமும் இல்லை. அலுப்பும் தோன்றுவதில்லை.

Watch our Video - Makkah in 2020, Insha Allah

★ ஐந்தாவது பெண் கூறுகிறாள் : 
என் கணவர் (வீட்டுக்குள்) நுழையும்போது சிறுத்தைப் போல் நுழைவார். வெளியே போனால், சிங்கம் போல் இருப்பார். (வீட்டினுள்) தாம் கண்டுபிடித்த (குறைபாடுகள் முதலிய)வை பற்றி எதுவும் கேட்க மாட்டார்.

விளக்கம் :
இந்தப் பெண்மணியின் வார்த்தைகளைக் கவனிக்கும்போது இவள், தனது கணவனை புகழ்ந்திருப்பதாகவும் கொள்ளலாம், இகழ்ந்திருப்பதாகவும் கருதலாம். எனினும் மேலெழுந்த வாரியாகப் பார்க்கும்போது புகழ்ந்திருப்பதாகவே தெரிகிறது.

அவள் கணவனை இகழ்ந்திருப்பதாகக் கொண்டால்; வீட்டிற்குள் வந்தவுடன் அவன் வீட்டைக் கவனிக்காது சீறி விழுவதையும், அடிக்க விரட்டி வருவதையும் பார்த்தால் சிறுத்தையின் குணம் படைத்தவனாகத் தோன்றுவான். அவன் வெளியில் சென்றுவிட்டாலோ சிங்கத்தைப்போல கம்பீரமாக நடந்து கொள்வான். வீட்டில் என்ன நிகழ்ந்தாலும் அதைப்பற்றி கொஞ்சமும் கவனம் செலுத்த மாட்டான் என்று பொருள் கொள்ள வேண்டும். அதற்கு மாறாக அவள் கணவனைப் புகழ்ந்திருக்கிறாள் என்று எடுத்துக்கொண்டால்; அவன் வீட்டிற்குள் வந்தால் அங்கு என்ன நடந்திருக்கிறது? என்ன நடக்கவில்லை? என விசாரணை செய்து எவருக்கும் துன்பம் இடைஞ்சல் கொடுப்பதில்லை. தூங்கிக்கொண்டிருக்கும் சிறுத்தைப் போல் இருப்பான். வெளியில் சென்றால் சிங்கம் கர்ஜிப்பது போல் பேசிக் காரியம் சாதிக்கும் திறமைசாலி என்று பொருள் கொள்ள வேண்டும்.

★ ஆறாவது பெண் கூறினாள் :
என் கணவர் உணவு உண்ண ஆரம்பித்தால் மிச்சம் மீதி ஏதும் வைக்காமல் அனைத்தையும் வாரி வழித்து உண்டு விடுகிறார். குடித்தாலும் மிச்சம் மீதி வைக்காமல் குடித்து விடுகிறார். படுத்தாலும் (விலகி) சுருண்டு போய் படுத்துக் கொள்கிறார். என் சஞ்சலத்தை அறிய தம் கையைக்கூட அவர் (என் ஆடைக்குள்) நுழைப்பதில்லை.

விளக்கம் :இந்தப் பெண்ணின் கூற்றில் கணவனைப் பற்றிப் புகழ், இகழ் இரண்டுக்கும் இடம்பாடு இருக்கிறது. எனினும் ஐந்தாவது பெண் வெளிப்படையில் புகழ்ந்திருப்பதைப் போல் இவள் வார்த்தையில் வெளித்தோற்றம் இகழாகவே தெரிகிறது.

இவளின் வாத்தையை புகழாக எடுத்துக்கொண்டால்; என் கணவன் கஞ்சனல்ல ஊதாரித்தனமும் உண்டு. பருகும் சுபாவமுடையவர். அவருடைய உணவிற்காகப் பற்பல உணவு வகைகள் வைக்கப்பட்டிருக்கும் ரொட்டி, பலகாரங்கள், பழங்கள், இன்னும் இதுபோன்ற பலவகை உணவு பதார்த்தங்கள் அனைத்தும் இருக்கும். அவைகளையெல்லாம் அவர் நன்கு சாப்பிட்டுவிட்டு, பருகும் முறை வரும்போது அங்கு வைக்கப்பட்டிருக்கும் பால், ஷர்பத் போன்ற பருகும் பனங்கள் அனைத்தையும் நன்கு திருப்தியாகப் பருகுவார். எவர் விஷயத்திலும் வீணாகத் தலையிட மாட்டார். பிறருடைய குற்றங்களைத் தேடிதிரிவது, அவர்களைத் தூற்றித் திரிவது போன்ற தீய குணங்கள் அவரிடம் இல்லை.

இனி அவளின் வார்த்தை கணவனை இழிவுப் படுத்துவதாக இருந்தால்; என் கணவர் பிறரைப்பற்றிய கவலை, அக்கரை இல்லாதவர். எது கிடைத்தாலும் அதை உண்டு குடித்து கொழுத்துப் போன சுயநலக்காரர். குடும்பத்தின்மீது அக்கரை இல்லாதவர்.

வீட்டுக்குள் அழகிய மனைவி இருக்கும்போது போர்வையை எடுத்துப்போர்த்திக் கொண்டு தூங்குவான். விடியும் வரை மனைவியைப் பற்றி சிறிதும் கண்டுகொள்ளவே மாட்டான். கட்டிய மனைவி இருக்காளே என்று கொஞ்சமும் கவலையே படமாட்டான். மனைவிக்கும் ஆசை, அபிலாசைகள் இருக்குமே என்று கொஞ்சம்கூட நினைத்துப்பார்க்க மாட்டான். பெண்மையை விளங்காத ஒரு சோம்பேரியான சுயநலக்காரன் இவன்.

★ ஏழாவது பெண் கூறினாள் : 
என் கணவர் விவரமில்லாதவர் அல்லது ஆண்மையில்லாதவர். சற்றும் விவேகமில்லாதவர். எல்லா நோய்களும் (குறைகளும்) அவரிடம் உண்டு. (அவரிடம் பேசினால் உன்னை ஏசுவார். கேலி செய்தால்) உன் தலையைக் காயப்படுத்துவார். (கோபம் வந்துவிட்டால்) உன் உடலைக் காயப்படுத்துவார் அல்லது இரண்டையுமே செய்வார்.

விளக்கம் :
இவர் ஆண்மை இல்லாத கோழையான மனிதர். அப்பாவியான மனிதர். சூதுவாது தெரியாதவர்தான் என்றாலும் கோபம் வந்துவிட்டால் யாரென்றுகூட பார்க்காமல் முரட்டுத்தன்மாக அவர்களைத்தாக்கி காயப்படுத்தக்கூடியவர். இவரிடம் பல நோய்கள் (குறைகள்) குடிகொண்டிருப்பதால் மனைவிக்கு இல்லற சுகம் கொடுக்க முடியாதவனாக, கட்டிய மனைவியுடன் ஒட்டி உறவாடி பெயருக்காக கணவனாக இருக்கிறார்.

★ எட்டாவது பெண் கூறினாள் : 
என் கணவர் தொடுவதற்கு முயலைப் போன்ற(மிருதுவான மேனி உடைய)வர். மரிக்கொழுந்து போல் மணக்கக்கூடியவர்.

விளக்கம் :
அவன் எளிய குணம் கொண்டவன். அழகிய நற்குணங்கள் அவனிடம் இருந்தது. அவனின் செயலெல்லாம் அமைதியாக இருந்தது. அவனின் உறவில் இருப்பவர்களுக்கு இன்சுவை இருக்கும். அவனின் நற்குணம் வாசனை திரவியங்கள் போல மணமிக்கதாக அழகாக, கவர்ச்சியாக இருந்தது.

Watch our Video - 












★ஒன்பதாவது பெண் கூறினாள் : 

என் கணவர் (அவரைத் தேடி வருவோரை கவர்ந்து இழுக்கும் வகையில்) உயரமான தூண்(கள் கொண்ட மாளிகை) உடையவர். நீண்ட வாளுறை கொண்ட (உயரமான)வர். (விருந்தினருக்கு உணவு சமைத்துப்போட்டு வீட்டு முற்றத்தில்) சாம்பலை நிறைய சேகரித்து வைத்திருப்பவர். (மக்கள் அவரைச் சந்திப்பதற்கு வசதியாக) சமுதாயக் கூடத்திற்கு அருகிலேயே வீட்டை அமைத்துக் கொண்டவர்.

விளக்கம் :
அவளுடைய இந்த வார்த்தையில் அவள் கணவனின் பல சிறப்புக்கள் அடங்கியிருக்கின்றன. உயர்ந்த மாளிகை வீடு என்பதிலிருந்து அவர் பெரிய பணக்காரர் எனத் தெரிகிறது. அவரை மக்கள் எப்பொழுதும் தேடிக்கொண்டிருப்பார்கள் அதனால் அவர்களுக்கு உணவு சமைத்து சமைத்து அவர் வீட்டில் சாம்பல் ஏராளமாகக் குவிந்துவிடும். உயர்ந்த தோற்றம் ஆடவர்களுக்கு எழிலாகும். அவன் கூரிய அறிவு கொண்டவனாக இருப்பதால் அவனிடம் ஆலோசனைக்கேட்க அடிக்கடி மக்கள் அவனைத் தேடி வந்து கொண்டிருந்தார்கள். மக்கள் அவர் வீட்டிற்கு அதிகமாக வருவதால் அவர் வீடு ஆலோசனை மண்டபம் போலிருக்கும் என்பது கருத்தாகும்.

★ பத்தாவது பெண் கூறினாள் : 
என் கணவர் செலந்தர். எவ்வளவு பெரிய செல்வந்தர் தெரியுமா? எல்லா செல்வந்தர்களையும் விட மேலான செல்வந்தர். அவரிடம் ஏராளமான ஒட்டகங்கள் உள்ளன. (அவற்றை அறுத்து விருந்தினர்களுக்கு உணவு பரிமாறுவதற்கு வசதியாகப்) பெரும்பாலும் அவை தொழுவங்களிலேயே (தயார் நிலையில்) இருக்கும். (விருந்தினர் வருகையை முன்னிட்டு மகிழ்ச்சியில் ஒலிக்கப்படும்) குழலோசையை அந்த ஒட்டகங்கள் கேட்டுவிட்டால் தாம் அழிந்தோம் என அவை உறுதி செய்து கொள்ளும்.

விளக்கம் :
ஒட்டகங்கள் மேயச் சென்றுவிட்டால் விருந்தாளிகள் வரும்போது அவைகளை மேய்ச்சல் காட்டிலிருந்து ஓட்டிவரத் தாமதப்படும் எனக் கருதி அவைகலை காட்டிற்கு ஓட்டிச்செல்ல விடுவதில்லை. அந்த அளவுக்கு அவரிடம் விருந்தாளிகள் வந்து கொண்டிருந்தனர்.

★ பதினொன்றாவது பெண் கூறினாள் : 
என் கணவர் பெயர் "அபூ ஸர்உ" எத்தகையவர் தெரியுமா? ஆபரணங்களை அவர் என் காதுகளில் ஊஞ்சலாடச் செய்திருக்கிறார். (ஆசையாசையாக உணவளித்து) என் மெல்லிய கைகளை கொழுக்க வைத்துள்ளார். அவர் என்னைப் பூரிப்படையச் செய்திருக்கிறார். என் மனம் நிறைந்திருக்கிறது. ஒரு மலைக் குகையில் (அல்லது "ஷிக்" என்னுமிடத்தில்) சிறிய ஆடுகளுடன் (திரிந்து கொண்டு) இருந்த குடும்பத்தில் என்னைக் கண்ட அவர் என்னை (மனைவியாக ஏற்று) குதிரைகளும், ஒட்டகங்களும் உள்ள தானியக் களஞ்சியமும் கால்நடைச் செல்வங்களின் அரவமும் நிறைந்த (அவரது பண்ணை) வீட்டில் என்னை வாழச்செய்தார். நான் அவரிடம் எதையும் பேசுவேன். நான் அலட்சியப்படுத்தப் பட்டதில்லை. நான் தூங்கினாலும் (நிம்மதியாக) முற்பகல் வரைத் தூங்குவேன்.. (என் தூக்கத்தை யாரும் கலைப்பதில்லை) நான் (சாப்பிட்டாலும்) பருகினாலும் பெருமிதப்படும் அளவிற்கு (உண்ணுவேன்.) பருகுவேன்..

(என் கணவரின் தாயார் அதாவது எனது மாமியார்) உம்மு அபீ ஸர்உ எத்தகையவர் தெரியுமா? அவரது வீட்டுக்களஞ்சியம் (எப்போதும்) கனமாகவே இருக்கும். அவரது வீடு விசாலமானதாகவே இருக்கும்.

(என் கணவரின் மகன்) இப்னு அபீ ஸர்உ எத்தகையவர் தெரியுமா? அவரது படுக்கை, உருவப்பட்ட கோரை போன்று (அல்லது உறையிலிருந்து எடுக்கப்பட்ட வாளைப்போன்று சிறியதாக) இருக்கும். (அந்த அளவிற்கு கச்சிதமான உடலமைப்புக் கொண்டவர்.) ஓர் ஆட்டுக்குட்டியின் சப்பை இறைச்சி அவரது பசியை தணித்து விடும். (அந்த அளவிற்கு குறைவாக உண்ணுவார்).

(என் கணவரின் மகள்) பிந் அபீ ஸர்உ எத்தகையவர் தெரியுமா? தம் தாய், தந்தைக்கு அடங்கி நடப்பவர். (கட்டான உடல் கொண்ட) அவளது ஆடை நிறைவானதாக இருக்கும். அண்டை வீட்டுக்காரி அவரைக்கண்டு பொறாமைக் கொள்வாள்.

(என் கணவர்) அபூ ஸர்உ உடைய பணிப்பெண் எத்தகையவள் தெரியுமா? அவள் எங்கள் (ரகசிய) செய்திகளை அறவே வெளியிடுவதில்லை வீட்டிலுள்ள உணவுப்பொருட்களை சேதப்படுத்துவதும் இல்லை. வீட்டில் குப்பைக்கூளங்கள் சேர விடுவதும் இல்லை. (அவ்வளவு நம்பிக்கையானவள்).

ஒருநாள் பாத்திரங்களில் (மோர் கடைந்து) வெண்ணெய் எடுக்கப்படும் (அதிகாலை) நேரம் (என் கணவர்) அபூ ஸர்உ வெளியே சென்றார். (வழியில் ஒரு பெண்ணைச் சந்தித்தார். அவளுடன் சிறுத்தைகள் போன்ற அவளுடைய இரண்டு குழந்தைகள் இருந்தனர். அந்த குழந்தைகள் அவளது இடைக்குக் கீழே இரு மாதுளங் கனிகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். ஆகவே (அவளது கட்டழகில் மனதைப் பறி கொடுத்து) என்னை விவாக விலக்கு செய்துவிட்டு அவளை திருமணம் செய்து கொண்டார். அவருக்குப் பின் இன்னொரு நல்ல மனிதருக்கு நான் வாக்கப்பட்டேன். அவர் வேகமாகச் செல்லும் குதிரையில் ஏறி (பஹ்ரைன் நாட்டிலுள்ள) "கத்" எனும் இடத்தைச் சேர்ந்த ஈட்டி ஒன்றை எடுத்துக் கொண்டார். மாலையில் வீடு திரும்பியபோது ஏராளமான கால்நடைகளை என்னிடம் கொண்டுவந்தார். மேலும் கால்நடைகளில் ஒரு ஜோடியை என்னிடம் வழங்கி உம்மு ஸர்உவே! நன்றாக நீயும் சாப்பிடு. உன் தாய் வீட்டாருக்கும் சாப்பிடக்கொடு" என்று சொன்னார்.

(ஆனாலும்) அவர் எனக்கு (அன்புடன்) வழங்கிய எல்லாப் பொருள்களையும் நான் ஒன்றாகக்குவித்தாலும் (என் முதல் கணவரான) அபூ ஸர்உவின் சின்னச் சிறு பாத்திரத்தைக்கூட அவை நிரப்ப முடியாது. (என்று சொல்லி முடித்தாள்).

விளக்கம் :
கணவனால் கைவிடப்பட்டு வேறொரு கணவனுக்கு வாக்கப்பட்டு சிறப்பாக அந்த கணவன் இவளை நடத்தியும், முதல் கணவனை மறக்க முடியாமல் அவனின் தாராளம், செல்வப்பெருக்கு, அவனின் கவனிப்பு உயர்வானது என்பதை பெருமையாக எடுத்துக் கூறி அபீ ஸர்உவை மறக்காமல் பாராட்டிக்க்கூறுகிறாள். அபீ ஸர்உ தான் இவளுக்கு மிகவும் பிடித்த கணவன் என்பதை மிக தெளிவாக சொல்லி மகிழ்கிறாள்.

உம்முல் முஃமினீன் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறுகிறார்கள்; ''அல்லாஹ்வின் தூதர் கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (என்னிடம்) (ஆயிஷாவே!) உம்மு ஸர்உவிற்கு, அபூ ஸர்உ எப்படியோ அப்படியே உனக்கு நானும் (அன்பாக) இருப்பேன்" என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸாஈ, திர்மிதீ)

இந்த வரலாறு ஹதீஸ் கலை நிபுணர்களிடத்தில் மிகவும் பிரசித்திப்பெற்றதாகும். இந்த பதினோரு பெண்களின் வரலாறு அடங்கிய இந்த அறிவிப்பு பற்றி பல தனி நூல்களும் எழுதப்பட்டிருக்கின்றன. சில நூல்களில் இந்த பதினோரு பெண்களின் எல்லா பெயர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த அறிவிப்பில் இலக்கியச் சுவை நிறைந்து காணப்படுகிறது. அரபுமொழி இலக்கியம் தெரிந்தவர்களுக்கு இது ஒரு சிறந்த இலக்கியத் தெவிட்டாத விருந்தாகும். இந்த ஹதீஸ் தொடரில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்கள் மட்டும் ஷமாயில் திர்மிதீயில் இருந்து எடுத்து இடையில் அமைக்கப்பட்டுள்ளது.



Like our Page - Sri Lankan Muslims


.Subscribe to our Channel - NAC

No comments:

Post a Comment

இலங்கையின் இளம் ஆளுமை ரஸ்னி ராஸிக்கின் அர்ப்பணிப்புகள் பற்றி ஒரு பார்வை..

2017ஆம் ஆண்டுக்கான இலங்கையின் மதிப்புமிக்க 10 இளம் நபர்களுள் ஒருவராக தெரிவு செய்யப்பட்டவர்தான் ரஸ்னி ராஸிக். குழந்தைகள் பராமரிப்பு உலக அமை...